நெல்லை | இருட்டுக்கடைக்கும் கவிதா சிங்கிற்கும் தொடர்பில்லையா? வெடித்த புதிய சர்ச்சை!
நெல்லையில் அல்வாவுக்கு பெயர்போன இருட்டுக் கடையை வரதட்சணையாக கேட்பதாக அதன் உரிமையாளர் கவிதா என்பவர் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கும் கடைக்கும் தொடர்பில்லை என புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இருட்டுக் கடை உரிமையாளர் என கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு அண்மையில் திருமணமானது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இருட்டுக் கடையை எழுதி வைக்க வேண்டும் என கேட்டு மகளுக்கு வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங்-கின் வழக்கறிஞர் என்ற பெயரில் நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இருட்டுக்கடை நயன் சிங்கிற்கே சொந்தம் என்றும், கிருஷ்ண சிங் மற்றும் பிஜிலி சிங் ஆகியோரின் உயில்களின்படி உரிமை அவருக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கவிதாவுக்கு கடை மீது எந்த தொடர்பும் இல்லை என்றும், அவருடன் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் நயன் சிங்கின் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், உயிலின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிங்கின் சகோதரர் நயன் சிங், ”திருநெல்வேலியில் அல்வாவுக்கு பெயர்போன இருட்டுக்கடை, தமக்கே சொந்தம், சட்ட ரீதியாக தமக்கு உரிய தீர்வு கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.