யாருக்கெல்லாம் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீடு?: நீதிமன்றம் விளக்கம்

யாருக்கெல்லாம் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீடு?: நீதிமன்றம் விளக்கம்
யாருக்கெல்லாம் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீடு?: நீதிமன்றம் விளக்கம்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர். சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. TNPSCயின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்.

ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு 1ஆம் வகுப்பு முதல் 10 மற்றும் 11, 12ஆம் வகுப்பு அல்லது பட்டயம், பட்டம் போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழக தலைமை செயலர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கும் போது எந்த வழியில் பயின்றவர்கள் என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். முறையான கல்வித்தகுதி உள்ளவர்களை மட்டுமே பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகியவற்றில் பணியமர்த்த வேண்டும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ்கள் முறையாக சரிபார்க்கப்பட வேண்டும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தில் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com