ஓபிஎஸ் அணியுடன் பேச வைத்திலிங்கம் தலைமையில் குழு
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலாவின் குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் நிபந்தனை விதித்திருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இதனையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் அணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே சில தலைவர்களும் எம்.எல்.ஏக்களும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்ததால் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சசிகலா அணி தரப்பில் இருந்து வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வைத்திலிங்கத்துடன் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன், வீரமணி, சி.வி.சண்முகன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.