தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்... “முதலமைச்சர் வேட்பாளர் என்றாலும், கட்சியின் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என எந்தப் பதவியாக என்றாலும் தான் இருப்பேன் என்ற சிந்தனையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டார்.
தேசிய அளவில் கூட்டணி வைத்திருக்கும் பிரதமர் மோடி அவரது அருகில் எடப்பாடி பழனிசாமியை வைத்து பேசியதை மறந்து விட்டு தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது முதல் எடப்பாடி பழனிசாமிக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து.
சனி அவருக்கு உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துள்ளது. அது அவரை வீழ்த்தாமல் விடாது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே, எனவே இந்த பொறுப்பிற்கு தகுதி இல்லாத எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து அந்த பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேசினார்.