அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் தனது ஆதரவு எம்.பி.க்களுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மைத்ரேயன் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, வருகிற 8ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வருகிற 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தனது ஆதரவு எம்.பிக்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக்கு பின்னர், மாலை வேளையில், அதிமுக வடசென்னை மாவட்ட தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் கலந்துரையாடினார். மேலும், ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் குறித்தும், வடசென்னை நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.