உதகையில் பேருந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு, 26 பேர் மருத்துவமனைகளில் அனுமதி
நீலகிரி மாவட்டம் உதகை அருகே 200 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.
உதகையில் 34 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மந்தாடா அருகே அந்தப் பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 9 பேர் உதகையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதமுள்ள 19 பேர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில் பேருந்து விபத்து உயிரிழப்புகள் குறித்து செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.