பெற்றோர்களே உஷார்! வண்டை விழுங்கிய 1 வயது குழந்தை பரிதாப மரணம்.. திருவள்ளூரில் நிகழ்ந்த சோகம்!
திருவள்ளூர் அருகே வண்டை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இவரது ஒரு வயது மகள் குகஸ்ரீ குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை எதிர்பாராத விதமாக தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கியதாக சொல்லப்படுகிறது.
பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..
பின்னர் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்த நிலையில், பெற்றோர்கள் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் குழந்தை முறுக்கு சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பெற்றோர்கள் கருதிய நிலையில், குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்தபோது அவரின் மூச்சுக் குழாயில் வண்டு கடித்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தை சடலம் உடற்கூறு ஆய்வு முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.