பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி : உறவுகள் கைவிட்ட அவலம்
20 ஆண்டுகளாக மதுரையில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் மூதாட்டி ஒருவர் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் 60 வயது மூதாட்டி கருப்பாயி. ஒரு மகள் மட்டும் உள்ள நிலையில் அனைத்து உறவுகளாலும் கைவிடப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக மதுரை அருகே அனுப்பானடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் வசித்து வருகிறார்.
கழிப்பறைக்கு வரும் பொதுமக்கள் தரும் சில்லறை மற்றும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை வைத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைத்து பசியை போக்கி வருவதாக கண்ணீர் மல்க கவலையுடன் அவர் தெரிவிக்கிறார். முதியோர் உதவித் தொகைக்காக சில புரோக்கர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும், இதுவரை எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருவதாக கூறுகிறார்.
கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பறை மூடப்படும் போது எந்தவித வருமானமும் இல்லாமல் பசியோடு வாழும் நிலை ஏற்படுவதால், அரசால் வழங்கப்படும் முதியோர் உதவி தொகை கிடைத்தால் பட்டினியை போக்கிக்கொள்ள முடியும் என்கிறார் மூதாட்டி கருப்பாயி. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.