
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெட்டன்விடுதியில் மேற்கு மாவட்ட பாஜக பொருளாளர் முருகானந்தம் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து அங்கு அண்ணாமலை பேசுகையில்...
இளைஞர்கள் காரல் மார்க்ஸை படிப்பது குறைந்துள்ளது, காரல் மார்க்ஸை படிப்பதன் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும், இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை, கனவு, கடந்த 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ஒரே தேர்தலாகத்தான் நடைபெற்றது. சுதந்திரம் கிடைத்ததற்குப் பிறகு 20 ஆண்டுகள் நாட்டில் ஒரே தேர்தல் தான் நடந்தது.
பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் Article 356-ஐ பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியை கலைத்ததால் தனியாக தேர்தல் நடக்க ஆரம்பித்து தற்போது ஒரே ஆண்டில் 7 தேர்தல் நடத்த கூடிய நிலை உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால், 6 மாதத்திற்கு முன்பே ஆட்சியர் முதல் அங்கன்வாடி ஆயம்மா வரை கிளம்பி விடுகின்றனர். தேர்தல் நடத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. பிறகு எப்படி அரசு அதிகாரிகள் மக்கள் பணியாற்றுவார்கள். அடிக்கடி நடத்தும் தேர்தலால் அரசு அதிகாரிகளின் பணி பாதிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் 4 வருடம் கொள்ளை அடிக்கின்றனர், அதன் பின் தேர்தலில் கொள்ளை அடித்த பணத்தை மக்களுக்கு கொடுக்கின்றனர், ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது இது போன்ற பிரச்னை இருக்காது, தேசிய கொள்கையின் அடிப்படையில் தேர்தல் நடக்கும். மக்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க வேண்டும். நாடு அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்றால் தேர்தல் நாடாக இருக்க கூடாது. 5 ஆண்டுகள் சேவை செய்வதாக இருக்க வேண்டும்.
எம்பி தேர்தலுக்கு பாஜக தொண்டர்கள் தயாராக வேண்டும், தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளது, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன், அவர்களும் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர், ஒரே எம்பி தொகுதியாக இருந்தால் தான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று பேசினார்.