மருத்துவ, சுகாதார ஊழியர்களுக்கு 1 மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி
மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர்.
கொரோனா : இந்தியாவில் உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். மிகுந்த கவனமுடம் இருக்க வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள இரவு பகலாக மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும்” எனக் கூறினார். இது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர். முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.