
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த பானவேடுதோட்டம் ஊராட்சியை சேர்ந்தவர் தியாகராஜன். கறிக்கடை நடத்தி வரும் இவரை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள நாய் வெறிப்பிடித்து மேலே பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் தியாகராஜனுக்கு லேசான கீரல் போன்று காயம் ஏற்பட்டது. நாய் லேசாக கீறி விட்டு சென்றதாக தியாகராஜன் அலட்சியமாக விட்டுள்ளார்.
பின்னர் இரண்டு மாதம் கழித்து தனக்கு தானே பேசிக் கொள்வது போன்று இருந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அவரை தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ராபிஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி தியாகராஜன் உயிர் இழந்தார்.
மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகராஜனின் உடலை சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் அடக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்து பானவேடுதோட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டின் அருகே உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. அதேபோல் அங்கு ப்ளிச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற நடவடிக்கை சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுனர். மூன்று குழந்தைகள், மனைவி ஆகியோரின் நிலைக் கேள்விக்குறியானதை அடுத்து அரசு தியாகராஜனின் மனைவிக்கு ஏதேனும் அரசு வேலை வழங்கிட வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.