ஓமலூர்: சாலை விபத்தில் உயிரிழந்த மனைவி: சோகத்தில் கணவன் தற்கொலை

ஓமலூர்: சாலை விபத்தில் உயிரிழந்த மனைவி: சோகத்தில் கணவன் தற்கொலை
ஓமலூர்: சாலை விபத்தில் உயிரிழந்த மனைவி: சோகத்தில் கணவன் தற்கொலை

ஓமலூர் அருகே விபத்தில் மனைவி இறந்த சோகத்தில், கணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் திலீபன், ஹரிஹரன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். சிவகுமார் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மகன்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகுமாரின் மனைவி சிவகாமி கடந்த மாதம் மேச்சேரி கோயிலுக்குச் சென்று விட்டு, உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் பிருந்தாவன் தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி, மோதியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக மனைவி இறந்த சோகத்தில் இருந்த சிவக்குமார், களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓமலூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷமறுந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

அவர்கள் படிப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com