ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் மயிலுக்கு கால் உடைந்து மயங்கி விழுந்தநிலையில், மயிலை மீட்ட இளைஞர்கள் சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மயில்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள கரடு, குன்று மற்றும் தோப்பு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மயில்கள், அங்கேயே தங்கி இனபெருக்கம் செய்து வாழ்கின்றன.
இந்த நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி அருகேயுள்ள சோலை நகர் என்ற கிராமத்தின் கரடு பகுதியில் இருந்து மயில் ஒன்று தவறி வந்துள்ளது. இந்த மயிலை தெரு நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதில், மயிலின் கால் உடைந்து மயங்கிய நிலையில் விழுந்துள்ளது. இதை பார்த்த, அந்த பகுதியை சேர்ந்த பாலாஜி, கிரி உள்ளிட்ட இளைஞர்கள், தெரு நாய்களை விரட்டிவிட்டு, அடிபட்ட மயிலை நாய்களிடம் இருந்து மீட்டனர்.
மேலும், நாய்கள் கடித்ததில் கால் உடைந்த மயில், நடக்க முடியாமல் தத்தளித்தது. இதை பார்த்த இளைஞர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த டேனிஸ்பேட்டை வனச்சரகத்தில் உள்ள குண்டுக்கல் கப்புகாடு வனக்காப்பாளர் கோபாலிடம் மயிலை இளைஞர்கள் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், டேனிஸ்பேட்டை கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு உரிய சிகிச்சை அளித்தனர். பின்னர் மயிலை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். அடிபட்ட மயிலை காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்த பெண்கள் மற்றும் இளைஞர்களை கிராம பொதுமக்கள் பாராட்டினர்.