ஒலிம்பிக் போட்டி: ஆயுதப்படை காவலருக்கு வாழ்த்து கூறி சென்னை காவல் நிலையங்களில் பேனர்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள ஆயுதப்படை காவலர் பதக்கம் பெற வாழ்த்துகள் கூறி காவல் ஆணையர் அலுவலகம் உட்பட அனைத்து காவல் நிலையங்களிலும் பேனர் வைத்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தில் சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகநாதன் பாண்டி என்பவர் பங்குபெற்றுள்ளார்.
கடந்த 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் காவலர் ஒருவர் பங்கேற்று இருப்பதால் அதற்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நாகநாதன் பாண்டியின் குடும்பத்தினரை வரவழைத்து பாராட்டுகளையும், சிறப்பு உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் நாகநாதன் பாண்டியின் பங்கேற்கும் ஓட்டப்பந்தைய போட்டி நாளை மாலை நடைபெற இருப்பதால் சென்னை காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் நாகநாதன் பாண்டி வெற்றி பெற்று நாடு திரும்ப வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நாகநாதன் பாண்டியை வாழ்த்தி பேனர் மற்றும் பதாகைகள் வைத்துள்ளனர்.