இறந்தவர் உடலை எடுக்கவிடாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்?
உடல்நலக் கோளாறு காரணமாக பழங்குடி இருளர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உடலை எடுக்கவிடாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாபாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யனார் (35). இவர்
விபத்தில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து வீடு திரும்பிய அவர், எழுந்திருக்க கூட முடியாமல் உடல்நலக்குறைவால் படுக்கையிலேயே இருந்தார். இவரின் மனைவி தனம் மற்றும் தாய் முனியம்மாள் ஆகியோர் அவரை கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அய்யனாரின் தாய் மற்றும் மனைவியை கொரோனா தொற்று இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து சிறிது நேரத்தில், உதவி செய்ய யாரும் இல்லாத அய்யனார் உயிரிழந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜீவா (வயது 10) மட்டும், இறந்துபோன தந்தையின் உடலுடன் தனியாக இருந்துள்ளான்.
அய்யனாரின் உடலை வீட்டில் இருந்து வெளியே எடுக்கக் கூட அதிகாரிகள் அனுமதிக்காமல் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.