ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் மூலமாக சென்னைக்கு வந்தடைந்தது.
ஒடிசா மாநிலம் ரூர்கெலா பகுதியில் இருந்து 2 லாரிகள் மற்றும் 2 கண்டெய்னர் டேங்குகளில் ஏற்றி வரப்பட்ட 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தடைந்தது. 2 லாரிகளை ஏற்றி வந்த ரயிலும், கண்டெய்னர் டேங்குகளை ஏற்றி வந்த ரயிலும் திருவொற்றியூர் பேசின்ரோட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கான்கார் சரக்கு பெட்டக கையாளும் ரயில்வே யார்டு பகுதிக்கு வந்தடைந்தது.
சரக்கு ரயிலில் வந்த திரவ ஆக்சிஜன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு லாரிகள் மூலம் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. யாஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜனை தமிழகத்திற்கு கொண்டுவர அரசு மாற்று ஏற்பாடு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த 2 ரயில்கள் இன்று சென்னை வந்தடைந்தன.