விளாகம் அருகே சூறை காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒகி புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்மாவட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை விளாகம் பாறைசாலை என்ற பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பகுதியில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் இருந்த நிலையில் காற்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சேதம் அடைந்த வாழைகளின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிர் செய்துள்ளோம். ஒரு வாழைக்கு 150 ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். எனவே பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.