உடல் பருமன் | இந்தியர்களை சூழ்ந்துள்ள ஆரோக்கிய நெருக்கடி.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
உடல் பருமன் எதிர்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்தியர்கள் உணவு முறையை மாற்றி, அலுவலகங்களில் நடப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடற்பயிற்சி அவசியமில்லை என்றாலும், உடல் பருமனை நோயாக கருதி அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில், உடல் பருமனாக இருப்போரின் விகிதங்கள் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். 2050ஆம் ஆண்டுக்குள் 17.4 சதவீத பெண்களும், 12.1 சதவீத ஆண்களும் உடல்பருமனுடன் வாழ்வார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. மென்பொருள் துறையில் அமர்ந்தே வேலை செய்யும் கலாச்சாரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தாக்கம் ஆகியவை, உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகின்றன.
எனவே, இந்தியர்கள் தங்களது உணவு முறை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைச் சார்ந்திருப்பதை மறுபரிசீலனை செய்வது, அலுவலகங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடப்பது மற்றும் தூக்க முறைகளை சரிசெய்வது போன்ற காரணிகள் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்காக தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகின்றனர். உடல் பருமன் எதிர்காலத்தில் சர்க்கரை மற்றும் இதயநோய்க்கு காரணமாக அமைவதால், அதை ஒரு நோயாக கருதி, அரசு உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

