"தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது.. பாஜகவுக்கு படிப்பறிவு இருந்து என்ன பண்ணினார்கள்?" - சீமான்
பாஜக மத அரசியலை முன்னிறுத்தி மனிதநேயத்தை அழிக்கிறது, இது படித்தவர்கள் செய்யும் செயல் அல்ல என்று சீமான் குற்றம்சாட்டினார். இறைநிலை ஆட்சியே மக்களுக்கு தேவையானது என வலியுறுத்திய அவர், எஸ்.ஐ.ஆர் மூலம் இறந்தவர்களின் வாக்கு விவரங்களையும் சேர்த்து முழு வாக்காளர் பட்டியலை களைப்பது விவசாய நிலத்தில் பயிருடன் களையையும் அழிப்பதற்கு ஒப்பான தவறான செயல் என கண்டித்தார்.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து பரப்பரை மேற்கொள்ள வருகை தந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. தேர்தல் கேரளா புதுச்சேரி அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் நிறைவடைந்துள்ளது ஆனால் தமிழ்நாடு மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பை அவசர அவசரமா செய்ய வேண்டிய தேவையே இல்லை. நிதானமா விவாதிச்சு செய்ய வேண்டிய வேலை. எப்பவுமே பிஜேபி இப்படி திட்டமிட்டு ஒவ்வொன்னையும் திருப்பும். திருப்பி CAA, NRC NIA எஸ்ஐஆர் சிறப்பு வாக்காளர் திருத்தம்னு... இந்த மாதிரி வேலைகளை கொண்டு வந்து மக்களை எப்பவுமே ஒரு பதட்டத்துல வச்சுக்கிறது அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு” என்று பேசினார்.
விஜயை விமர்சித்த சீமான்..
விஜய் குறித்து பேசிய சீமான், ”தம்பி விஜய் பேசும்போதெல்லாம் எனக்கும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும், விசிகவுக்கும், ஸ்டாலினா விஜயகாந்தாங்குறாப்ல.. ஒரு பக்கம் ஊழல் கட்சி ஒழிக்கணும்ங்கிறாரு, ஆனா எடப்பாடி தொகுதிக்குள்ள போட்டி போடல. அந்த தொகுதிக்கு அவரு போகல. அதேபோல தம்பி உதயநிதி தொகுதிக்கு போகல, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதிக்கு போகல. பாஜக பாசிசம், கொள்கை எதிரினு சொல்றாரு அந்த தலைவர்கள் போற எந்த தொகுதிக்கும் போகல. நேரடியா என் தொகுதிக்குதான் வராரு. இப்ப யாருக்கு போட்டியா வந்து இறங்கி வேலை செய்றாருங்கிறத நீங்க பாக்கணும்.
காரைக்குடியில் அவர் பேசாமல் சென்றுள்ளார், அப்படி பேசியிருந்தால் ஒரு பிடல் காஸ்ட்ரோ, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் மாதிரி பேசிருப்பாரா.. பேசிருந்தா தலைகீழா மாத்திட்டு வந்திருப்பாரா.
செய்தியாளர் ஒருவர் உங்க மேல இருக்க பாசத்துல பேசாம போயிட்டாரான்னு கேக்குறாரு. அப்ப நான் 'ஆமா'ன்னு தான் சொல்லணும். பேசிருந்தா என்ன பேசிருப்பார்? இதே 2000 தாரேன், 2500 தாரேன்னு. அதுதானே வேற என்ன பேசப்போறாங்க” என பேசியுள்ளார்.
பாஜகவை விமர்சித்த சீமான்..
பாஜக குறித்து பேசிய அவர், “பாஜகவுக்கு படிப்பறிவு இருந்து என்ன பண்ணினார்கள்? மதத்தை முன்னிறுத்தி உலகத்துல எவனாவது அரசியல் செய்வானா? இது படிச்சவன் செய்யுறதா? செய்வானா? மதம் அரசாளலாமா? மதம், மதம் அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தா அங்க மனிதநேயம்னு ஒன்று செத்தே போயிரும். இது படிச்சவன் செய்யுற செயலா? இறை மாதிரி இந்த ஆட்சி செய்யணும். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்'னு என்னுடைய வேதம் சொல்லுது. இறைவன் கேட்கிற உயிருக்கும், கேட்கத் திறனற்ற உயிருக்கும், புல்லு பூண்டு, நாய் நரி எல்லாவற்றுக்கும் வேண்டியதைக் கொடுப்பான்ங்கிறதுதான் இறைவன். அப்படி ஆட்சி செய்யணும். அவன்தான் தலைவன்.
அதைவிட்டுபுட்டு நீ இந்த மதத்துக்குத்தான் நாடு, இந்த மதத்துக்குத்தான் செய்வேன்னா... இது படிச்சவன் செய்யுற செயலா? படிச்சு என்ன பண்ணீங்க? இவன் செய்யுறதும் அதையேதான் சொல்லுவீங்க. மறுசீரமைப்பு செய், தேர்தல் முடிஞ்சவுடனே செய். எஸ்.ஐ.ஆர் (SIR) ஏங்க கொண்டு வந்தீங்க? அதில் காரணம் என்ன? சீர்திருத்தம். இறந்தவர்கள் வாக்கு அதுல இருக்கு. இறந்தவர்கள் சான்றிதழை சமர்ப்பிச்சிருக்காங்க, ஒப்படைச்சிருக்காங்க. அதுல இருக்கிறவனை எடுத்து, ஒரு நிலத்துல பயிர் இருக்குன்னா களையை மட்டும்தானே எடுக்கணும்? அவன்தானே விவசாயி? மொத்தமா அழிச்சுட்டு மறுபடியும் நடுவோம்னா இது எப்படிப்பட்ட செயல்? இது படிச்சவன் செய்யுற செயலா? எஸ்.ஐ.ஆர் ஏன் கொண்டு வந்தார்கள்” என விமர்சித்துள்ளார்.

