“பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடு; ஒரேமொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” - சீமான்!
திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றி வருகிறார், அதைவிடக் கொடுமையானது விகடன் வலைதளத்தை முடக்கியது. இந்தியாவின் முதன்மை பொறுப்பில் இருப்பவர் மோடி; அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காகத்தான் பார்க்க வேண்டும்.
அதை குறியீடாக வைத்து கருத்து படத்தை விகடன் வெளியிட்டது. அதையே தாங்க முடியவில்லை என்றால் இந்த நாட்டு குடிகளை வலுக்கட்டாயமாக கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பியதை விடவா இது அசிங்கமாக போய்விட்டது. சுதந்திரம் என்பதற்கு எந்த கருத்தும் இல்லை..
அண்ணாமலை விகடனை எச்சரித்ததாக சொல்கிறார்; ட்ரம்பை எச்சரிக்க வேண்டியது தானே. நாங்களும் அண்ணாமலையை எச்சரிக்கின்றோம்; அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள் என எச்சரிக்கின்றேன். இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல..” எனத் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்த மாதிரி செயல் தொடரும்போது தேசியம் என்பது இருக்குமா.? இந்தியா ஒரு தேசியமா.? பல தேசங்களின் ஒன்றியம் இது. பல மொழி பேசும் இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, கலாச்சாரம், மொழி, வழிபாடு போன்றவை வெவ்வேறாக உள்ளது.
ஒரே இனமான தமிழகத்திற்குள் பல்வேறு சாதி, குடி கட்டமைப்புகள் உள்ளன.. ‘அனைத்து மக்களின் மொழி வழி தேசியத்திற்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும்’ என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.
மும்மொழி கொள்கையில் என்ன இருக்கிறது.? பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மனமுதிர்ச்சி இல்லை நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழக்கின்றனர் முதிர்ச்சியற்ற நிலையில் மாணவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் மூன்று ஐந்து எட்டாம் வகுப்புகளில் பொது தேர்வு கொண்டு வருவது எப்படி ஏற்க முடியும். புதிய கல்விக் கொள்கை கட்டாய இந்தி மொழியை சொல்கிறது. பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்வார்களா.?
பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன?. வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்.? ஆனால் அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்.? அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்.?.
கட்டாயமாக இந்தியை படிக்கச் சொல்வது சரியல்ல. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது. இதற்காக நிதி ஒதுக்க முடியாது என சொல்வது கொடுங்கோல் ஆட்சி ஆணவத்தின் ஆட்டம்.. பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும் ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” எனத் தெரிவித்தார்.