சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்ததது தற்போது அமளி பூங்காவாக மாறியுள்ளது. தமிழகத்தில், பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலையில், சாதாரண குடிமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.
மூலகொத்தளம் குடிசைமாற்று வாரிய கட்டடம், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளது. மூலகொத்தளம் குடிசைமாற்று வாரிய கட்டடம் அப்பகுதியில் உள்ள ராமதாஸ் நகர் மக்களுக்காகதான் கட்டப்பட்டது. அவர்களுக்கே அந்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும். செந்தில் பாலாஜியை பாதுகாக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்தாது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார்.
திமுக கூட்டணியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அடுத்த 9 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தோற்பவர்களுடன் பயணிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் திமுக அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வர வாய்புள்ளது” என கூறினார்.