அதிர வைக்கும் சத்துணவு திட்ட ஊழல்... அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்..?

அதிர வைக்கும் சத்துணவு திட்ட ஊழல்... அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்..?
அதிர வைக்கும் சத்துணவு திட்ட ஊழல்... அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்..?

கிறிஸ்டி நிறுவனத்தில் சமீபத்தில் நடைபெற்ற வருமான வரிசோதனையின் மூலம் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஏழை மாணவர்களும் பள்ளிக்கு செல்ல வேண்டும், அவர்களும் பசியாற உணவு உண்ண வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை, கொண்டைக் கடலை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கேட்டை சேர்ந்த கிறிஸ்டி என்கிற நிறுவனம் தான் மதிய உணவு திட்டத்திற்காக உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அங்கன்வாடிகளுக்கு சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிறிஸ்டி நிறுவனம் மூலம் வழங்கப்படுகின்றன. இதுதவிரவும் அரசின் மற்ற சமூக நலத்திட்டங்களுக்கு தேவையானவற்றை கிறிஸ்டி நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சோதனை நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகும் நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல அதிர்ச்சிகர தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் கிறிஸ்டி நிறுவனத்திற்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் இடையே பல கோடி ரூபாய் அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிகிறது. சுமார் 2400 கோடி அளவில் பணம், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து கைமாறியதாக தெரிகிறது. அதிகாரிகளின் உறவினர்களுக்கும் ஆன்லைன் வழியாக பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பணபரிவர்த்தனை நடைபெற்றதாக தெரிகிறது. இதுதவிர குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இங்கே பணியமர்த்துங்கள் போன்ற பரிந்துரை கடிதங்கள் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகளுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்புவது உள்ளிட்ட பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் எதன் அடிப்டையில்..? எதற்காக..? அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கும்  கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை அவர்கள் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. இலவச மதிய உணவு திட்டத்தில் மோசடி செய்யவதற்காக இதுபோன்ற பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக என்ற சந்தேகம் வருமான வரித்துறையினருக்கு எழுவதாக தெரிகிறது.

இதனிடைய கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தமிழக அரசுக்கு வருமான வரித்துறை விரைவில் தெரிவிக்கும் எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறை சார்பில் வலியுறுத்தப்படும் என தெரிகிறது.

Courtesy: TheHindu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com