``எந்த காற்று மழை வந்தாலும் அரசு பாதுகாப்பாக சாமாளிக்கும்” - முதல்வர் ஸ்டாலின் பேட்டி
மாண்டஸ் புயல் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கொட்டும் மழையிலும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்டஸ் புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொட்டும் மழையிலும் நேரடியாக அவசர கால மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு விளக்கம் அளித்தனர்.
மாவட்டம் வாரியாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் கேட்டறிந்தார். மாமல்லபுரத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிடம் பேசிய முதலமைச்சர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்;தியாளர்களை சந்தித்த முதல்வர் முக.ஸ்டாலின் பேசும்போது, “ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கவனித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
எந்த மழை வந்தாலும், எந்த காற்று வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு அதிலிருந்து மக்களை உரிய வகையில் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. பொதுமக்கள் சில இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் தங்க வைக்கப்படவில்லை. உரிய வகையில் ஆட்சியர்கள் எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு மூலமாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். முழு ஒத்துழைப்பு தந்தால் அது வெற்றிகரமாகும்” என தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேட்டியளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்ததோடு கண்காணிப்பு அதிகாரிகளிடமும் நிலவரங்களை முதல்வர் கேட்டறிந்துள்ளார் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்ட தலைவர்களோடு நேரடியாக காணொளி வாயிலாக முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
மாமல்லபுரம் பகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 121 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீனவ கிராம மக்களை நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்று உரிய உணவு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
1,936 நிவாரணம் மையங்கள் மாநில முழுவதும் தயார் நிலையில் உள்ளன. இரவு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான உதவிகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்குவோம்.
தற்போது வரை 2204 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் இனி தொடர்ந்து மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை தொடர்ந்து நிவாரண முகாம்களில் பொதுமக்களை பத்திரப்படுத்தும் வேலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மிகப்பெரிய பாதிப்பு சென்னைக்கு இருக்காது என எதிர்பார்க்கிறோம்.
சென்னையை பாதித்தாலும் தயார் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும். அணைகளை திறந்து விடும் நிலை தற்போது எங்கும் இல்லை. உரிய முன்னறிவிப்புகள் கொடுத்தே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.