கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு அரசு உதவி இல்லை? வழக்கு தொடர்ந்த மனைவி!

கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு அரசு உதவி இல்லை? வழக்கு தொடர்ந்த மனைவி!
கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு அரசு உதவி இல்லை? வழக்கு தொடர்ந்த மனைவி!

கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் 25 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்த  மருத்துவர் ஏ.கே.விவேகானந்தன்,  பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, கொரோனா தொற்று அவருக்கும் ஏற்பட்டு 2020ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பணியில் இருந்தபோது மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி வி.ஆர்.திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கணவர் இறந்து இரண்டு ஆண்டுகளாகியும் 25 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என்றும்,  இரு குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான  தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்தும் அரசிடமிருந்து பதிலில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கணவரின் மரணத்திற்கான நிவாரணமாக 25 லட்ச ரூபாயும், கருணை அடிப்படையில் வேலையும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர்18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com