\
“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ

“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ

“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ
Published on

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது இல்லை என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.  

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பெற்ற போதும் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அப்போலோ  மருத்துவமனைக்கு கடந்த 6ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு கடந்த 11ஆம் தேதி அப்போலோ தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது கைவசம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில், “அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒருமாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே வீடியோ பதிவை சேமிக்க முடியும். புதிதாக பதிவுகள் சேமிக்கப்படும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். சிறப்பு ‌உத்தரவுகள் இருந்தால் மட்டும் கூடுதலான நாட்கள் வீடியோ பதிவு சேமித்து வைக்கப்படும். ஆகவே ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான வீடியோ பதிவுகள் இல்லை. அவற்றை தாக்கல் செய்ய இயலாது” என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

சிசிடிவி காட்சிகள் வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியாக உள்ளதால், அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வரும் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தினம் ஆஜராக உள்ள சுப்பையா விஸ்வநாதன் சிசிடிவி பதிவுகள் அழிந்து போனது தொடர்பான விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை என்று அப்போலோ நிர்வாகம் கூறும் விவகாரத்தில், ஆறுமுகசாமி ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com