நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக பொதுத்துறை, ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என தெரிவித்துவிட்டது. அத்துடன், 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.