காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு
காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த மேடையை பார்க்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய எனக்கு 70-வது பிறந்தநாள். நான் என்றும் உங்களின் ஒருவன். ஸ்டாலின் என்ற பெயரில் நீங்கள் அனைவரும் உள்ளீர்கள். இங்கு கூடியுள்ள அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான். மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக, மக்கள் கவலையை தீர்க்கும் தலைவனாக உள்ளேன். இந்த விழாவுக்கு தலைமை ஏற்றுள்ள துரைமுருகன் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்.

தமிழ்நாட்டு மக்கள் எனக்கிட்ட கட்டளை அடிப்படையில் முதல்வராக உள்ளேன். கடைமையும், பொறுப்பையும் நீங்கள் தான் கொடுத்தீர்கள். அவசர காலத்தில் சிறை சென்று சித்தரவதை அடைந்தேன். பொதுவாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்கும் என்று என்னை சிறைக்கு அனுப்பினார் கலைஞர். இந்த 55 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எனது கால் படாத இடம் இல்லை. வெயில், இரவு - பகல் பாராமல் உழைத்த எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை.

மக்களுக்காக போராடும் நமக்கு காலநேரம் இல்லை. நாளை வழக்கம் போல் பணியை தொடங்க உள்ளேன். எனக்கு 70 வயது என சொன்னால் தான் ஆச்சரியப்படுகிறார்கள். வயது என்பது மனதை பொறுத்தது. இளமை என்பது முகத்தில் இல்லை. மனதில் உள்ளது. லட்சியவாதிகளுக்கு வயதாகவில்லை. நாளுக்கு நாள் இளைஞன் ஆகிறேன். தொடக்கத்தில் இளைஞர் அணியில் இருந்த போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

இன்று உங்கள் முன்பு ஒரு உறுதி மொழி எடுக்கிறேன். அண்ணா, கலைஞர் கட்டியெழுப்பிய கழகத்தை நிரந்தரமாக ஆட்சியில் வைப்பேன். திமுக. அரசு நெறிமுறைப்படி கல்வி, பொருளாதரத்தில் முன்னேற வேண்டியது அவசியம். கொள்கையை பரப்ப கட்சி, நிறைவேற்ற ஆட்சி. கடந்த 2 ஆண்டு காலத்தில் நிறைவேற்றி உள்ளேன். தேர்தல் வாக்குறுதி அளித்ததில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. மீதமுள்ளதை இன்னும் ஒரு ஆண்டில் நிறைவேற்றுவேன். என்னை பொறுத்தவரையில் நம்பர் ஒன் முதல்வர் இல்லை. நம்பர் ஒன் ஆட்சியை தருவது.

மல்லிகார்ஜுனா கார்கே என்னை வாழ்த்தியது எனக்கு பெருமை. இது இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்கம். இன்றைய காலத்தில் மிக அவசியம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல். இதில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் மிக அவசியம். பாஜக-வை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் மாநில பிரச்னைகளையும் மறந்து ஒன்றிணைய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அடுத்தடுத்த வெற்றிபெற நமது ஒற்றுமைதான் காரணம். தமிழகத்தை போன்று தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது வேறு. ஒரேயொரு செங்கலை வைத்து தமிழகத்தை பாஜக கேவலப்படுத்துகிறது. நீட் விலக்கு கொடுக்கவில்லை. சமஸ்கிருத மொழிக்கு கோடிகோடியாக நிதி ஒதுக்குகிறது. மகாபாரதத்தில் சூதாட்டம் உள்ளது என நினைத்து ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமான கூட்டம் தான் எனது பிறந்த நாள் கூட்டம். வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியையும் வென்றாக வேண்டும். அதற்காக இன்று முதல் அனைவரும் உழையுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com