என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
Published on

போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடியாது என நிர்வாகம் தெரிவித்ததால் புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக குறைத்தது தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே வழங்கி வந்தபடி பணி நாட்கள் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அந்தோணி, பூவராகவன், சங்கர் ஆகிய 3 தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது, இதனை தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களும் நீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களுக்கு பணியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றம் என்.எல்.சி நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க என்.எல்.சி நிர்வாகத்திற்கு உதவி தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தினார். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து 3 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில இருப்பதால் அவர்களை பணியில் சேர்க்க முடியாது என என்.எல்.சி நிர்வாகம் கூறியதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து நெய்வேலியில் கூடி முடிவெடுக்கப்படும் என தொழற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com