நீலகிரி மாவட்டம் கூடலூரில் வாழும் பழங்குடி மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "புத்தரி" எனப்படும் "கதிர் அறுவடை திருவிழாவை" விமரிசையாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பணியர், காட்டு நாயக்கர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பாரம்பரிய விழாவான புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழா கூடலூர் அருகேயுள்ள புத்தூர்வயல் பகுதியில் நடைபெற்றது. விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், கடந்த பத்து நாட்களாக விரதம் இருந்த பணியர் இளைஞர்கள், வயலில் பூஜைகளை செய்து, நெற்கதிர்களை அறுவடை செய்தனர். அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்களுக்கு பூஜை செய்து அவற்றை கோவிலுக்கு எடுத்துச்சென்று வழிபட்டனர்.
விழாவில் பணியர் இன பழங்குடியின பெண்கள் அவர்களது பாரம்பரிய இசைக்கு ஏற்ப பாரம்பரிய நடனம் ஆடினர். கூடலூரில் உள்ள பழங்குடியின மக்கள் மட்டுமின்றி உதகையில் இருந்து படுகர், கோத்தர், தோடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று கதிர் அறுவடை திருநாளை பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.