சேரம்பாடி பகுதியில் பகல் நேரங்களில் ஊருக்குள் நடமாடும் 'கட்டை கொம்பன்' யானையை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியுள்ள நிலையில், இடம்பெயர்ந்து சென்ற காட்டு யானைகள் மீண்டும் தங்களது மீண்டும் தங்களது வாழிடத்திற்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில் சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ' கட்டை கொம்பன் ' யானை பகல் நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த யானையால் இதுவரை பொதுமக்களுக்கு தொந்தரவு ஏதும் இல்லாவிட்டாலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க வனத்துறையினர் யானையை 24 மணி நேரமும் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வப்போது சாலையில் சுற்றித் திரியும் இந்த யானையால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் இந்த யானை சுற்றி திரிவதால் மக்களும் வீட்டை விட்டு வெளியேற அச்சப்படுகிறார்கள்.