
நீலகிரி மாவட்டம் உதகை வனப் பகுதியில் இருந்து அவ்வபோது புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நகரப் பகுதிகளுக்கு உலா வருவது வழக்கம். அப்படி உதகை மந்தடா பகுதியில் இன்று அதிகாலை சாலைக்கு வந்த சிறுத்தை வாகன முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தை பார்த்ததும் அங்குமிங்கும் அலைந்தது.
இதன் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிறிது நேரத்தில் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது சிறுத்தை. இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் உலாவரும் சிறுத்தையை வனத் துறையின் கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.