திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தற்கொலை - கணவர் கைது
சென்னை பல்லாவரத்தில் திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, திரிசூலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி மனிஷா, அபின்ராஜ் என்பவரை காதலித்ததாக தெரிகிறது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மனிஷா காதலர் அபின்ராஜூடன் கடந்த ஓராண்டாக வசித்து வந்துள்ளார். ஆகஸ்ட் 25ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக மனிஷாவின் தந்தை முருகன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மனிஷா தற்கொலைக்கு அவரது கணவர் அபின்ராஜே காரணம் என்பது தெரியவந்துள்ளது. மனிஷாவை காதலித்த அபின்ராஜ், அனிதா என்பவரையும் காதலித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மனிஷா தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை மனிஷா - அபின்ராஜ் - அனிதா மூவரும் பேசும் ஆடியோ மூலம் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.