வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடுமென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் 28ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 26ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால், வரும் 28ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

