போர்வெல் அருகே சுரங்கம்போன்று மற்றொரு குழி: சுர்ஜித்தை மீட்க புதிய திட்டம்
ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்றது.
குழந்தை சிக்கி 22 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது 80 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒன்றரை மணி நேரத்தில் 80 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்ட முடிவு செய்துள்ளது. இதனிடையே மணல் மூடியுள்ளதால் சுர்ஜித்தின் நிலை குறித்து தெரியவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.