குழந்தையை மீட்க புது முயற்சி: மணப்பாறை வந்தடைந்தது ரிக் இயந்திரம்..!
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சிக்காக, ரிக் இயந்திரம் மணப்பாறை வந்தடைந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டான். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும்.
இதனிடையே குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்டப்பட உள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.
இந்நிலையில் குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம் மணப்பாறை வந்தடைந்துள்ளது. குழந்தை சிக்கியுள்ள இடத்திற்கு இந்த இயந்திரம்
இன்னும் 1 மணி நேரத்தில் சென்றுவிடும் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து 29 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.