நெல்லை: ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு கவனிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள்!
ஊரடங்கு காலத்தில் தெருவோரங்களில் ஆதரவின்றி இருந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை மாநகராட்சி நிர்வாகமும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் சேர்ந்து மீட்டுள்ளனர்.
நெல்லை டவுன் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில் மாநகரத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ள வயதானவர்கள், பெண்கள் என 112 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் காலையில் முதியோர்களை குளிக்க வைத்து உடைமாற்றி சுத்தமாக இருக்க வைத்தல், மூன்று வேளைகளிலும் உணவு, இரு வேளைகள் டீ, காபி, சிற்றுண்டி அளிக்கப்படுகிறது. தற்போது பராமரிப்பில் உள்ள 112 பேரில் 22 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தேவையான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கோவில்பட்டியில் இயங்கும் அரசு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுநாள் வரை எந்தவொரு அடையாளம் இன்றியும், முகவரி இன்றியும் காணப்பட்ட நபர்கள் மீண்டும் தங்கள் யார் என்று அறிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இவர்களை பராமரித்து தன்னார்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்