நெல்லை, கன்னியாகுமரியில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பவில்லை. தொடர் பதட்டம் நிலவியது. இதனால் அங்கிருக்கும் போராட்டக்காரர்களின் தகவல் பரிமாற்றத்தை தடுப்பதற்காக, தூத்துக்குடி மற்றும் அதன் அண்மை மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்படுவதாக தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றது. மேலும் நெல்லை, கன்னியாகுமரியில் ஏன் இணையதள சேவையை முடக்கப்பட்டது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு விளக்களித்த தமிழக அரசு, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதுதொடர்பாக இருமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியது. இரு மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தூத்துக்குடியில் மட்டும் இணையதள சேவை தடை தொடர்கிறது.