”அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியல” - தற்கொலைக்கு முயன்ற நெல்லை பெண் காவல் ஆய்வாளர்
நெல்லை மாவட்டத்தில் பணிச்சுமை காரணமாக பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர், நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பணிச்சுமை காரணமாகவும் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும், மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவில் ஆள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து காவலர்களுக்கு மிகுந்த பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் குடியிருப்பு ஏராளமான கல்வி நிலையங்கள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கும் பகுதி என்பதால் பாளையங்கோட்டை எப்போதுமே நெருக்கடியுடன் காணப்படும். ஆனால் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையில் மிக குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இதற்கிடையில், பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாசலம், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றது. இருப்பினும் அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி என்பவர், கடந்த மாதம் 27 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரி திட்டியதன் காரணமாகவே பழனி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதேபோல், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி காவலர்களுக்கு வார விடுமுறை நெல்லை மாநகரில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாநகர காவல் துறையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ஆய்வாளர் மகேஸ்வரி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தனது தந்தை உயிரிழந்த செய்தி கேட்டும் சுதந்திர தின அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி விட்டு அதன்பிறகே தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
இவரது கணவரும் நெல்லை நுண்ணறிவுப் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். நெல்லை மாநகர காவல் துறையில் கடந்த சில மாதங்களில் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலைக்கு முயற்சித்தது என 5 சம்பவங்கள் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. மாநகர காவல் துறையில் தொடரும் இந்த அசம்பாவித சம்பவங்கள் மற்ற காவலர்கள் இடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.
செய்தியாளர் / நெல்லை நாகராஜன்