இடுகாட்டிற்குச் செல்ல கூட பாதையில்லை: நெல்லையில் அவலம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இடுகாட்டிற்கு இறந்தவர் உடலை கொண்டு செல்ல பாதையில்லாமல் நெல் வயல் வழியாக கொண்டு சென்ற அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி வட்டம் களக்காடு அருகே உள்ள உதயமார்த்தாண்டபேரி கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடுகாடு ஊருக்கு மேற்கே சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. வயல்களின் வழியே செல்ல வேண்டியுள்ளது. நஞ்சை பயிரிட்டிருக்கும் போது நெற்பயிரினை மிதித்துக் கொண்டு செல்ல நேர்கிறது. வாழை பயிரிட்டிருந்தால் வாழைகளை வெட்டி வழியேற்படுத்தி செல்ல வேண்டியதாகக் கூறப்படுகிறது.
நேற்று இதே ஊரைச் சார்ந்த நம்பி (வயது65) என்ற முதியவர் இறந்து விட்டார். இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை இல்லாத காரணத்தினால் வேறு வழி இல்லாமல் தனியாருக்கு சொந்தமான நெற்பயிரை மிதித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி மிகுந்த சிரமத்திற்கு இடையே ஊர் இளைஞர்கள் இடுகாட்டுக்கு இறந்த முதியவரின் உடலை கொண்டு சென்றுள்ளனர் . இடுகாட்டை பயன்படுத்த வசதியாக நிரந்தர பாதை அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.