நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: தேர்வு எழுதியவர் மீது வழக்குப்பதிவு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வு எழுதிய நபர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் உதித் சூர்யா, தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவது புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வு எழுதிய நபர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் விலக்கு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வு எழுதிய நபர் மீது, 419, 420, 120பி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தல், கூட்டு சதி ஆகிய குற்றத்திற்காக இந்த 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வு எழுதியவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாஸ்கரன் கூறியுள்ளார். இதற்கிடையே, மாணவர்களை கைது செய்வதற்காக, 7 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.