நெல்லையில் கொல்லப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கு, திமுக எம்.பி கனிமொழி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள உமா மகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்ற கனிமொழி, அவரின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உமாமகேஸ்வரின் மகள்கள், கார்த்திகா மற்றும் பிரியாவை சந்தித்த அவர், ஆறுதல் கூறி தேற்றினார். அங்கிருந்து புறப்பட்ட கனிமொழி அமிதாபட் நகரில் உள்ள பணிப்பெண் மாரியம்மாளின் வீட்டிற்கும் சென்றார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய கனிமொழி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக நெல்லை ரெட்டியார்பட்டியில் வசித்துவந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23ஆம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.