நாங்குநேரி: சேர்த்து வைக்க கோரி கணவன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா
நாங்குநேரி அருகே கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் கணவன் வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தர் மகள் ஜெனிபர் ரோஸிமா. இவரும் பாணான்குளத்தைச் சேர்ந்த ஜேசிபி ஆப்பரேட்டரான ஜேசுராஜன் மகன் ஜான்கோயில்ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு ஜான் கோயில்ராஜாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெனிபர் ரோஸி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு நடந்த விசாரணைக்கு பின் கடந்த ஜூன் மாதம் இருவரும் தேவாலயம் ஒன்றில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். மேலும் ஜான் கோயில்ராஜா தங்கையின் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்காக 3 மாதம் கழித்து ஜெனிபர் ரோஸிமாவை தன்னுடன் வைத்து குடும்பம் நடத்துவதாகவும் உறுதி அளித்து ஜெனிபர் ரோஸிமாவை தாழைகுளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் ஜான்கோவில் ரோஜா எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்றும் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் ஜெனிபர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று இரவு பாணான்குளம் வந்த ஜெனிபர் ஜான் கோயில் ராஜா வீட்டிற்கு சென்றார். இவர் வருவதை பார்த்த ஜான் கோவில்ராஜாவின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியேறி சென்றுள்ளனர். இதனால் வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து கணவருடன் சேர்ந்து வாழ வைக்கவும் தனக்கு நியாயம் வேண்டும் என கோரி ஜெனிபர் ரோஸிமா தர்ணாவில் இரவு முழுவதும் ஈடுபட்டார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைப்படி திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்குமாறு கணவன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

