எளிமையாக நடைபெற்ற ‘மதுவிலக்கு மங்கை’ நந்தினி திருமணம்

எளிமையாக நடைபெற்ற ‘மதுவிலக்கு மங்கை’ நந்தினி திருமணம்
எளிமையாக நடைபெற்ற ‘மதுவிலக்கு மங்கை’ நந்தினி திருமணம்

மதுவிலக்கு கோரி தொடர்ந்து போராடி வரும் நந்தினிக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இதற்கான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கின் விசாரணை கடந்த மாதம் 27-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நந்தினி அவரது தந்தை ஆனந்தன் நேரில் ஆஜராகினர். அப்போது நடைபெற்ற வாதத்தில், “மதுபானம் என்ன உணவுப் பொருளா? மருந்து பொருளா..? போதைப் பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி... இதனைக் கேட்ட எங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது” என்று பேசி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரும் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நந்தினிக்கு திருமண தேதி நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே இவ்வழக்கின் மேல் விசாரணைக்காக நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் சொந்த பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நந்தினி- குணா திருமணம் எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தினி குலதெய்வம் கோயிலில் அவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அநீதிக்கு எதிரான தங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் மணமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நேற்றிரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று நந்தினி திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com