தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிர குற்றநடவடிக்கை - நீதிமன்றம் காட்டம்

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிர குற்றநடவடிக்கை - நீதிமன்றம் காட்டம்
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிர குற்றநடவடிக்கை - நீதிமன்றம் காட்டம்

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கேரி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக 50 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. கடந்த 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ. 4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ. 32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாகப் பின்பற்ற அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது” எனக் கூறப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், "ரூ.50 அபராதம் 1948ல் கொண்டுவரப்பட்டது. இதை தற்போதைய நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். அபராதம் செலுத்திவிட்டு பெயர் பலகையில் மாற்றம் செய்வதில்லை" எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ”அபராதம் போதுமானதல்ல; தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. எனவே, அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com