’எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாள் பரோல் வழங்க வேண்டும்’ - முதல்வருக்கு நளினி கடிதம்
தாயாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், மாமனாருக்கான சடங்குகளை செய்யவும் தனக்கும், தனது கணவருக்கும் 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி சிறை துறை மூலம் தமிழக முதல்வருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29-ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி 30 நாள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும் சிறை துறை மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னையில் உள்ள தனது தாய் பத்மா (81). வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்கவும், கவனித்துக்கொள்ளவும். இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும், மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என நளினி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.