முருகனுக்கு பரோல் கோரிய மனு நிராகரிப்பு - சிறைத்துறை தகவல்

முருகனுக்கு பரோல் கோரிய மனு நிராகரிப்பு - சிறைத்துறை தகவல்

முருகனுக்கு பரோல் கோரிய மனு நிராகரிப்பு - சிறைத்துறை தகவல்
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும்,  ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என  குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு  நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருந்த போது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், அதை எதிர்த்து சிறைத்துறை டிஐஜி-யிடம் மேல் முறையீடு செய்யலாம் என சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

இதையடுத்து, சிறைத்துறை டிஐஜி-யிடம் மேல் முறையீடு செய்யும்படி அறிவுறுத்தியதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்கலாம்: 'பிரதமர் மோடிக்கு மேடையிலேயே கிளாஸ் எடுத்ததுதான் திராவிட மாடல்' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com