நளினி பரோல் நீட்டிக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மகள் திருமண ஏற்பாடுகளுக்காக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எழுவரில் ஒருவரான நளினி, தன் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் கோரி பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் விசாரித்தனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்புடன், வேலூர் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட நளினி தானே ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 வேலூர் சிறையிலிருந்து நளினி பரோலில் வெளியில் வந்துள்ளார்.
வேலூர் சாத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் நளினி, அதற்கான ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்த நிலையில், அவரது கோரிக்கை ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நளினி மனு குறித்து அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒத்திவைத்தனர்.