கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன.
தொடர்மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 145 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதில் 11 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதுபோக நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை உள்ளிட்ட பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கைகுளம், தாமரைகுளம் என மூன்று குளங்கள் நிரம்பி வழிந்து, அந்த நீர் குறும்பனை பகுதியில் உள்ள, 150 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. மக்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.