நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு, மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே ஆட்டோ சென்றபோது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணித்தோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கைக்குழந்தையை வைத்திருந்த பெண் மற்றும் மூதாட்டியை முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர். ஆம்புலன்ஸ்க்கு அழைத்த அவர்கள், அங்கேயே காத்திருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உடனடியாக தனது காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து நடந்தவற்றை கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் குழந்தையையும் தாயையும் காவல்துறை ரோந்து வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்செயலை கண்டு பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.