நாகை | வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊரில் கொண்டாடும் கன்னிப் பொங்கல் விழா
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
தமிழகத்தில் தை பொங்கல் விழா உற்சாகமாக கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், தாமரை குள தெரு, வாய்க்கால் கரை தெரு, பெருங்கடம்பனூர், தேவூர், கீழ்வேளுார், காக்கழனி, வலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னிப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து விளையாட்டுப் போட்டிகள், பானை உடைத்தல் கோலப்போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது,
மேலும் ஒருவர் மீது ஒருவர் கலர் சாயங்கள் பூசியும், மஞ்சள் நீர் ஊற்றியும் அன்பை வெளிப்படுத்தி உறவுகளை வலுப்படுத்துகின்றனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் முழுவதும் பெண்கள் பங்கேற்கும் சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமாவதை தடுக்கும் விதத்தில் விழிப்புணர்வு வண்ண கோல போட்டியும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பாரம்பரியத்தை மறக்காமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று கும்மி கொட்டினர்.
இதைத் தொடர்ந்து கூட்டாஞ்சோறு எனப்படும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களிலும், பிற மாவட்டங்களிலும் பணி நிமித்தமாக சென்றுள்ளவர்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இவர்கள் தங்களது உறவினர்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.